தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் கடலூர் மாவட்டம், லால்பேட்டை வீராணம் ஏரிப்பகுதியில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ளத் தடுப்பு பணியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோயில்சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசன வசதியும், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மூலம் கூடுதலாக சுமார் 40,000 ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
வீராணம் ஏரியின் மூலம் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 74 கனஅடி வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரிக்கு கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த டிசம்பர் 2024இல் அதிகபட்சமாக 30,000 கனஅடி வெள்ளநீர் வந்தடைந்தது. இதனால் வீராணம் ஏரி நிரம்பிய நிலையில், கதவணைகளின் அளவைத் தாண்டி, திடீரென வெளியேறியதால், வடிகால் வாய்க்கால் கரைகள் சேதமடைந்து அருகிலுள்ள கிராமங்களில் வெள்ள நீர் உட்புகுந்து அதிகப்படியான சேதம் ஏற்பட்டது.
இவ்வாறான எதிர்பாராத வெள்ள சேதங்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது வீராணம் ஏரிக்கு ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் விரிவான வெள்ளத் தடுப்பு பணி மேற்கொள்ள அறிவிப்பு வெளியிட்டார்கள்.அதனடிப்படையில் இன்றைய தினம், ரூ.29 கோடி மதிப்பீட்டில் வீராணம் ஏரியில் கூடுதல் நீர்போக்கி அமைத்தல், வெள்ளத் தடுப்புச்சுவர் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக நீர்போக்கிகள் அமைத்து கட்டும் போது, ஏரிக்கு வரும் அதிகப்படியான வெள்ள நீரினை ஏரிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் எளிதாக வெளியேற்றவும் வடிகால் வாய்க்கால் கரைகள் உடையாமல் பாதுகாக்கவும் முடியும். அருகிலுள்ள கிராமங்களில் வெள்ளநீர் உட்புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்துவது முற்றிலும் தடுக்கப்படும்.அத்துடன் வீராணம் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்படவுள்ளதுஇதன் மூலம் இப்பகுதியில் வளர்ச்சி ஏற்படுவதுடன் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



