குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ஏரி தண்ணீர் சூழ்ந்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. குடியாத்தம் கேவி குப்பம் பேரணாம்பட்டு பரதராமி சைன குண்டா உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் குற்றங்களுக்கு இந்த நீதிமன்றம் தான் பிரதான நீதிமன்றமாக திகழ்ந்து வருகிறது.
இந்த கட்டிடமானது காந்தி நகர் பகுதியில் உள்ள சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் 20 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாததால் சுமார் 2.5 ஏக்கர் இடத்தில் 2010ம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றமாக கட்டி திறக்கப்பட்டது.
இங்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்கள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு பின்புறத்தில் நீதிபதிகள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
தற்போது ஏரியில் தண்ணீர் நிரம்பி அருகில் இருக்கும் நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதிமன்ற கட்டிடம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடத்தை சூழ்ந்துள்ளதால் நீதிபதிகள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து வேறு இடத்திற்கு சென்று விட்டனர்.
மேலும் வழக்கறிஞர்கள் தனது வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே நீதிமன்ற கட்டிடத்திற்குள் உள்ள ஏரி தண்ணீரை அகற்றி நீதிமன்ற கட்டிடத்திற்குள் ஏரி தண்ணீர் வராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



