ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்று அதிகாலை முதல் தீவிர வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer)
ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற பெயரில் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட இடங்கள்: ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz) மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகியவை இலக்கு வைக்கப்பட்டுள்ளன.
தலைநகரில் பதற்றம்: தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது ஏவுகணை வீச்சுகள் நடத்தப்படுகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் தனது பாதுகாப்புப் படைகள் மூலம் எதிர்த்தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி வீடியோ
தாக்குதல் தொடங்கிய சிறிது நேரத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட அதிபர் ட்ரம்ப், ஈரானிய ஆட்சிக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:
“ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட வழங்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்துவிட்டது. அமெரிக்காவையும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் ஏவுகணைத் தயாரிப்பில் அந்நாடு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஈரானின் ஏவுகணைத் தொழில் மற்றும் கடற்படையை அமெரிக்கா தரைமட்டமாக்கும்.”
மேலும், “ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தைச் சந்திக்க வேண்டும். ஈரானிய மக்களே, இந்த ஆட்சியைத் தூக்கியெறிந்து உங்கள் அரசை நீங்கள் பொறுப்பேற்க இதுவே கடைசி வாய்ப்பு,” என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்ட கமேனி
இந்தத் தாக்குதலின் முக்கிய இலக்காக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் தற்போது தெஹ்ரானில் இல்லை என்றும், அவர் பாதுகாப்பான ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: தோல்வியடைந்த பேச்சுவார்த்தை
கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் தலையீட்டால் ஈரான் – இஸ்ரேல் இடையிலான 12 நாள் போர் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து அணு ஆயுதங்களைக் கைவிடுவது குறித்து ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது.
இருப்பினும், ஈரானின் நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்த ட்ரம்ப், நேற்றைய தினம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய இந்த அதிரடித் தாக்குதல் அரங்கேறியுள்ளது.



