ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இன்னும் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய கள நிலவரம் மற்றும் ஈரானின் புவியியல் பரப்பளவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னரே இந்த காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முக்கியத் தலைவர்கள் பலி: ட்ரம்ப் தகவல்
ஈரான் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல்களில் இதுவரை அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்ட அவர், அமெரிக்காவின் இலக்குகள் முழுமையாக எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது எனத் தெரிவித்தார்.
அமெரிக்கத் தரப்பு உயிரிழப்புகள்
இந்த ராணுவ நடவடிக்கையில் மூன்று அமெரிக்க வீரர்கள் வீரமரணமடைந்ததை அதிபர் ட்ரம்ப் வருத்தத்துடன் உறுதிப்படுத்தினார்.
வீரர்களுக்குப் புகழாரம்: “அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள். போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை, எனினும் தவிர்க்க முடியாதவை,” என்று அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு
ஈரான் தற்போது பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், அதனை ட்ரம்ப் நிராகரித்துள்ளார். “அவர்கள் இப்போது பேச விரும்புகிறார்கள், ஆனால் இதை கடந்த வாரமே செய்திருக்க வேண்டும். தற்போதைக்குத் தாக்குதல்கள் நிறுத்தப்படாது,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ள ஈரான், உலக நாகரிகத்திற்கே சவால் என்பதால் இந்த நடவடிக்கை அவசியம் என்றும் அவர் வாதிட்டார்.
ட்ரூத் சோஷியல் பதிவில் எச்சரிக்கை
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானிய கடற்படையின் 9 பெரிய கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் தலைமையகம் தகர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:
“உலக வரலாற்றின் தீய மனிதர்களில் ஒருவரான காமேனி கொல்லப்பட்டதன் மூலம் ஈரானிய மக்களுக்கும், அமெரிக்காவிற்கும் நீதி கிடைத்துள்ளது. ஈரானிய மக்கள் ஆட்சியைத் தங்கள் கையில் எடுக்க வேண்டும். ஒருவேளை ஈரான் பதிலடி கொடுத்தால், உலகம் இதுவரை காணாத அளவிலான அதிதீவிர தாக்குதலை அமெரிக்கா நடத்தும்.”
அடுத்தகட்ட நகர்வுகள்
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற வளைகுடா நாடுகளின் தலைவர்களுடன் தான் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக ட்ரம்ப் கூறினார். அமெரிக்கப் படைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் தொடரும் என்பதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அடுத்த சில வாரங்களுக்குப் பதற்றம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



