இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான் நாட்டுப் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய அதிரடித் தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டையும், பிரதமர் நரேந்திர மோடியின் மௌனத்தையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
தாக்குதலும் உயிரிழப்புகளும்
விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ‘மிலன் 2026’ கூட்டுப் பயிற்சிக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு, மீண்டும் ஈரான் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த ‘ஐஆர்ஐஎஸ் டேனா’ (IRIS Dena) என்ற போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியது. இலங்கை அருகே நடந்த இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 87 வீரர்கள் உயிரிழந்தனர்.
“அமெரிக்கா வருந்த வேண்டியிருக்கும்” – ஈரான் எச்சரிக்கை
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்:
“இந்தியக் கடற்படையின் விருந்தினராக வந்த ‘டேனா’ கப்பல் மீது, சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கையின்றி அமெரிக்கா கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்கா உருவாக்கியுள்ள இந்த முன்னுதாரணத்திற்காக அந்த நாடு கடுமையாக வருந்த வேண்டிய நிலை வரும்.”
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு
இந்தச் சூழலைச் சுட்டிக்காட்டி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார். அவரது பதிவின் முக்கிய அம்சங்கள்:
பொருளாதார நெருக்கடி: இந்தியாவின் இறக்குமதியில் 40%-க்கும் அதிகமானவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகின்றன. தற்போது அந்தப் பாதை மூடப்பட்டுள்ளதால், எல்.பி.ஜி (LPG) மற்றும் எல்.என்.ஜி (LNG) விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
அருகாமையில் போர்: போர் மேகங்கள் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டன. இந்தியப் பெருங்கடலில் ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டும் பிரதமர் இதுவரை வாய் திறக்கவில்லை.
தன்னாட்சி அதிகாரம்: நாட்டை வழிநடத்த ஒரு உறுதியான தலைமை தேவைப்படும் சூழலில், இந்தியாவின் மூலோபாய தன்னாட்சியை (Strategic Autonomy) அடகு வைத்துவிட்டு, சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமரே நமக்கு உள்ளார்.
உலகம் ஒரு இக்கட்டான கட்டத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பும், வெளியுறவுக் கொள்கையும் பெரும் சவால்களைச் சந்தித்து வருவதாக ராகுல் காந்தி தனது பதிவில் எச்சரித்துள்ளார்.



