திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் மறைந்த புதைவிட கற் வட்டங்கள் இருப்பதாக கண்டறிந்து தமிழக தொல்லியல் துறை சார்பில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆண்டு முதல் கட்ட அகழாய்வு பணி நடைபெற்றது.
இதில் 21 ஈமப் பேழைகள் கிடைத்ததில் அதில் 6 ஈமப் பேழைகள் முழுமையாக இருந்தன. மேலும் ஈரக் குறியீட்டு பானை ஓடுகள், சூது பவள மணிகளில் நட்சத்திரக்குறியீடுகள் உள்ள மணிகள், சுடு மண்ணாலான பல்வேறு குறியீடுகள் அமைந்த மணிகள், கற்களால் உருவாக்கப் பட்ட மணிகள், இரும்புக் கோடரிகள், கத்திகள், உளிகள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டன.
இந்தப் பொருட்களை வைத்து கீழடி போல கீழ்நமண்டியிலும் அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைத்து கீழ்நமண்டியை சுற்றுலாத்தலமாக அறிவிக்கவேண்டும். மேலும் கீழ்நமண்டி பகுதியில் அகழ்வாராய்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு புதைந்து கிடக்கும் பல்வேறு பகுதிகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் பகுதியில் வந்தவாசியும் உண்டு என்பதை வெளிப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீழ்நமண்டி பகுதியின் அகழாய்வு இயக்குநர் விக்டர் ஞானராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கூறியதாவது:-
இரண்டாம் கட்ட அகழ்ழாய்வு பணியோடு கீழ் நமண்டி அகழ்வாராய்ச்சி பணி முடிவு பெற்றது. மேலும் இதுகுறித்து அகழாய்வு செய்ய வேண்டும் என்றால் அரசு ஆணையிட்டால் மட்டுமே செய்ய முடியும். குறிப்பாக கீழ் நமண்டியில் கிடைக்கப் பெற்ற அகழாய்வு பொருட்கள் தொல்பொருள் துறைக்கு சொந்தமான கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.



