கள்ளக்குறிச்சி வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டட இறுதிக் கட்டப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும்சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன் ஆகியோர் உடனிருந்தார்கள்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிர்வாகப் பயன்பாட்டிற்காக கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத்துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இக்கட்டடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமார் 35.18 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 7 முறை நான் இக்கட்டட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்துள்ளேன். புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் சுமார் 95 சதவீதம் முடிவுற்றுள்ளன. இதர பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கட்டடத்தில் அலங்கார வளைவு, பூங்கா, டைல்ஸ் பதித்தல், வண்ணம் பூசும் பணிகள் ஆகியவை முடிவடையும் நிலையில் உள்ளன. எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம் தமிழ்நாடு முதலமைச்சரால் நேரில் திறந்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அப்போது பொதுப்பணித்துறை அரசு உயர் அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.



