ராஜஸ்தானில் இருந்து விருதுநகரை நோக்கி 30 டன் கடலை பருப்பு ஏற்றிக்கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த செல்வராஜ் (வயது 45) என்பவர் ஓட்டினார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் லாரி வேடசந்தூர் அருகே திண்டுக்கல் – கரூர் நான்கு வழிச் சாலையில் உள்ள லட்சுமணம்பட்டி நால்ரோடு கடந்தபோது எதிர்பாராத விதமாக சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரி கார்டை கடக்க வளையும் பொழுது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் ஏறி தடுப்பு கட்டைகளை உடைத்துக் கொண்டு நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயம் இன்றி தப்பினார்.
லாரியின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. லாரியில் இருந்து கடலைப்பருப்பு கீழே கொட்டியது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



