கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு வீட்டு மனை மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி 1540 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் வந்தவாசி பகுதியில் 120 மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால் 32 பயனாளிகளுக்கு மட்டுமே பிரதமர் வீடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் அரசு அலுவலர்கள் தாமதம் செய்து வருகின்றனர். பட்டா கிடைப்பது தாமதமாகிறது என குற்றம் சாட்டி,திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க வந்தபோது அவர் மனு பெறாமல் அலட்சியப்படுத்தியதாகக் கூறி, சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரின் வாகனத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். பிறகு மாவட்ட வருவாய் அலுவலர் இராமபிரதீபனிடம் மனு அளித்தனர்.



