பாரத ரத்னா விருதுக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா, 63-ஆவது குருபூஜை விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், மதுரையில் இருந்து சாலை வழியாக பசும்பொன் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர் தூவியும், அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மணிமண்டபத்தை உருவாக்கி கொடுத்தவர் கலைவஞர்.
மதுரை ஆண்டாள்புரம் பாலத்திற்கு தேவரின் பெயரை சூட்டியவர் கலைஞர். மேலும், அழகப்பா பல்கலைக்கழத்தில் தேவர் பெயரில் ரூ.25 லட்சம் மதிப்பில் அறக்கட்டளை உருவாக்கினார். தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடியவர் கலைஞர்.
பசும்பொன்னில் ரூ.3 கோடி செலவில் தேவர் திருமகனார் பெயரில் திருமண மண்டபம் கட்டப்படும், முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வழிமொழிந்து பரிந்துரைக்கப்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.



