திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலியப்பட்டு ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது.
இந்த பள்ளி போதிய பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் இரண்டாம் வகுப்பு படித்த பள்ளி மாணவன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியானான். எனவே மற்ற மாணவர்களின் பெற்றோர்கள் இந்தப் பள்ளியில் போதிய கட்டிட வசதியும் பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனல்காடு பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர்.
மேலும் சில மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தனர் இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பள்ளியை அரசு மூடியது.
இதனால் அப்பள்ளியில் பயின்ற ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படித்த அப்பகுதி மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். எனவே பாலியாப்பட்டு பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளி தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரிக்குதொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் இப்பகுதிக்கு அரசு தொடக்கப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலின் பாலியப்பட்டு கிராமத்தில் புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். பாலியாப்பட்டு பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்விக்காக நடந்து சென்று படிக்கும் நிலையை போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாலியாப்பட்டு பகுதிக்கு புதிய அரசு தொடக்கப்பள்ளி தொடங்கப்படும் என அறிவித்ததை அறிந்த அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துபட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பள்ளி மாணவமாணவிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டி மகிழ்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



