தமிழ்நாட்டில் கிராமப்புறக் குடிநீர் திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வரவேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
குடிநீர் திட்டங்களில் தமிழகத்தின் சாதனை
பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. மாநிலத்தில் உள்ள 1.25 கோடி கிராமப்புற வீடுகளில், இதுவரை 1.12 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு, ஜல் ஜீவன் திட்டத்தில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நிலுவையில் உள்ள நிதி: ரூ. 3,112 கோடி
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பங்களிப்பில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக வர வேண்டிய தொகையில் இன்னும் ரூ. 3,112 கோடி நிலுவையில் உள்ளது.
2024–25 நிதியாண்டிற்கு ரூ. 2,434 கோடி ஒதுக்கப்பட்டும், இதுவரை ரூ. 732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024 செப்டம்பர் மாதம் முதல் ஒன்றிய அரசிடமிருந்து எந்த நிதியும் பெறப்படவில்லை என்று முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணிகள் தடையின்றி நடைபெற, தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 2,550 கோடியை ஏற்கனவே விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் (கட்டம்-3)
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் ரூ. 8,428 கோடி மதிப்பிலான ஒகேனக்கல் மூன்றாம் கட்டத் திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு முகமை (JICA) உதவியுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
“இந்த முக்கியமான திட்டத்திலிருந்து ஒன்றிய அரசு தற்போது பின்வாங்குவது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களைப் பாதிக்கும். எனவே, இத்திட்டத்திற்கான நிதியுதவியையும், ஒப்புதலையும் விரைந்து வழங்க வேண்டும்” என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய திட்டங்களுக்கு அனுமதி கோரிக்கை
ஜல் ஜீவன் 2.0 திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 7,590 கோடி மதிப்பீட்டில் 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல், திருச்சி, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்கள் பயன்பெறும். இதற்கும் உரிய நிதி ஒப்பளிப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.



