காவிரி நீர் பிரச்சினை, டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சி மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூரில் திமுக சார்பில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வரவேற்புரை வழங்கினார். மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா, மக்கள் ஜனநாயக கட்சி மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி, திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆர். ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஆடிப்பெருக்கு காலத்திலும் காவிரி டெல்டா ஆறுகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதாகவும், குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் சம்பா சாகுபடியின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்தார். காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெற மாநில அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு சட்ட ரீதியாக எதிர்த்து, விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குறுவை சாகுபடி பாதிப்பால் சுமார் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

மேலும், பயிர் காப்பீட்டு பிரீமியத்தை அரசே முழுமையாக ஏற்க வேண்டும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும், தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான பிரச்சினைகளை திமுக சார்பில் வலியுறுத்தி எழுப்புவோம் என்றும், மக்கள் மன்றம், நீதிமன்றம், சட்டமன்றம் என அனைத்து தளங்களிலும் விவசாயிகளின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும் உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் துயரத்தைப் பற்றி கவலைப்படாமல் அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டினார். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காணாமல் அதை திசைதிருப்புவதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது என்றார்.
காவிரி பிரச்சினை குறித்து தமிழகம் முழுவதும் கவலை நிலவுகின்ற நிலையில், முதல்வர் விஜய் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிடுவதிலேயே ஈடுபட்டுள்ளார் என்றும், அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் அனைவரும் ரீல்ஸ் அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
மேலும், “2021 முதல் 2025 வரை ஜூன் மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமாகியும் தண்ணீர் திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய 42 டி.எம்.சி. தண்ணீரும் தமிழகத்திற்கு வரவில்லை. விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கூட முதல்வர் கேட்கவில்லை. நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதல்வரால் இந்த நிலைமை தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது” என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.



