ஆவின் பாலில் ரசாயன நெடி வீசுவதாகவும், சேத்தியாதோப்பில் மாவு கலப்படம் நடைபெறுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்டக் குழு அமைத்து அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், மறுபுறம் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் உள்ளிட்ட பொருட்கள் கலந்து கலப்படம் செய்யப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கலப்பட குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்துவது அரசின் நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும், முறையான தரக் கட்டுப்பாட்டு பரிசோதனைகள் இல்லாமல் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, ஆவின் பாலில் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவு கலப்படம் தொடர்பான இரு விவகாரங்களையும் விசாரிக்க உயர்மட்டக் குழுவை அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் உறுதியானால் சம்பந்தப்பட்ட ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் தூய்மையான பால் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.



