சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி பட்டாசு ஆலையில் வேதிப்பொருள் கலவை இயந்திரத்தை சோதனை செய்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், குஜராத்தைச் சேர்ந்த பொறியாளர் 95 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டி – எம்.புதுப்பட்டி சாலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா பைரோடெக்னிக்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 3 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், பட்டாசு ஆலையில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் வேதிப்பொருள் கலவை செய்வதற்காக வாங்கப்பட்ட புதிய இயந்திரம் சோதனை செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பரோடாவைச் சேர்ந்த பொறியாளர் அகமது இப்ராகிம் (45), இயந்திரத்தை பொருத்தி சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பட்டாசு ஆலை காசாளர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பொறியாளர் அகமது இப்ராகிம் 95 சதவீத தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே, விபத்து குறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்து குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



