சென்னை புறநகர் ரயில் சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவது குறித்து கனிமொழி எம்.பி தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
சென்னை – தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் நடைமேடை மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக, கடந்த சில நாட்களாக புறநகர் மின்சார ரயில் சேவைகளில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் பயணிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கனிமொழி எம்.பி-யின் குற்றச்சாட்டு
இது தொடர்பாக கனிமொழி எம்.பி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.



