2017-ல் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, 2021-ல் விடுதலையானது முதல் அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை அவரை கட்சியில் சேர்க்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சமீபகாலமாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரை ஒன்றிணைத்து அதிமுகவில் இணைய சசிகலா தரப்பு முயன்றது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்களை மீண்டும் இணைக்க வாய்ப்பே இல்லை எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இத்தகைய சூழலில், தமிழக அரசியல் களத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திருப்பம் இன்று நிகழ்ந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று சசிகலா தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த மேடையில் உரையாற்றிய அவர், தனது அரசியல் பயணத்தின் அடுத்த கட்டத்தை உறுதிப்படுத்தி, புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசுகையில், “நான் பேசாமல் மௌனமாக இருந்தால், அது ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகிவிடும். தமிழக மக்களுக்காகவும், நமது தொண்டர்களுக்காகவும் புதிய களத்தைக் காணப்போகிறோம். ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கப் போகிறோம். இது அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய வழியில் ஏழை எளிய மக்களுக்கான திராவிடக் கட்சியாக இருக்கும். துரோகிகளையும் எதிரிகளையும் வேரறுப்பதே இக்கட்சியின் நோக்கம்.” என்று தெரிவித்தார்.
சசிகலா கட்சி கொடி
புதிய கட்சிக்கான கொடியையும் சசிகலா இதே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொடியில் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்துடன், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போதும் எனக் கூறிய சசிகலா, இனி மக்கள் நலன் மற்றும் கட்சி மறுமலர்ச்சிக்காக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சசிகலாவின் இந்தப் புதிய கட்சி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் சசிகலாவின் வருகை வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



