“தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அடுத்தகட்டமாக 2030-ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதே எங்களது இலக்கு,” என முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற “கனவுகள் மெய்ப்படும்” என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தமிழகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான 14 முக்கிய அம்சங்கள் அடங்கிய தொலைநோக்குப் பார்வையை முதல்வர் வெளியிட்டார். சுமார் 1.80 கோடி குடும்பங்களிடம் கருத்து கேட்டு இந்த “ப்ளூ பிரின்ட்” தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதல்வர் அறிவித்த 14 முக்கிய அம்சங்கள்:
1. வீட்டுவசதி: அனைவருக்கும் முகவரி
2030-க்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் கட்டித் தரப்படும். “ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு முகவரி” என்பதே இலக்கு.
2. மருத்துவம்: நலமுடன் தமிழ்நாடு
நீரிழிவு, புற்றுநோய் கண்டறிய ஆரம்பநிலை சிறப்பு முகாம்கள்.
தாய்-சேய் நலனில் இந்தியாவிலேயே முதலிடம் பிடிக்க நடவடிக்கை.
அனைத்து மாவட்டங்களிலும் மனநல ஆலோசனை மையங்கள்.
3. வேளாண்மை: செழிப்பின் அடையாளம்
சாகுபடி பரப்பு 50 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும். உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்படும். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
4. பள்ளிக்கல்வி: ‘ஸ்மார்ட்’ கல்வி
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 100% Smart Class Rooms அமைக்கப்படும். 300-க்கும் மேற்பட்ட நூலகங்கள் ‘Library 5.0’ என்ற நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
5. உயர்கல்வி மற்றும் AI
‘நான் முதல்வன் 2.0’ மூலம் மாணவர்களுக்கு உலகளாவிய திறன் பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
6. சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம்
சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு தொழில் தொடங்க கடன் வசதிகள் எளிதாக்கப்படும். புதிய ‘சமூகநீதிக் கல்லூரி விடுதிகள்’ திறக்கப்படும்.
7. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாடு
வீட்டுமனையற்ற அனைவருக்கும் பட்டா வழங்கப்படும். ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம்’ மேலும் விரிவுபடுத்தப்படும்.
8. ஊரக வளர்ச்சி: உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள்
அப்துல் கலாம் அவர்களின் கனவுப்படி, கிராமங்களில் நகர்ப்புற வசதிகளை ஏற்படுத்த ‘உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 ஊராட்சிகளில் இது செயல்படுத்தப்படும்.
9. தொழில் துறை: Make In Tamil Nadu
18 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கெனத் தனியாக ‘Large Language Model’ (LLM) உருவாக்கப்படும்.
10. கால்நடை மற்றும் மீன்வளம்
மீன் உற்பத்தி 4.50 லட்சம் டன்னாக உயர்த்தப்படும். பால் உற்பத்தி நாளொன்றுக்கு 4.50 கோடி லிட்டராக அதிகரிக்கப்படும்.
11. நகராட்சி நிர்வாகம்: எழில்மிகு நகரங்கள்
நகரங்களில் 20% பசுமைப் பகுதிகள் உருவாக்கப்படும். வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக 3% பரப்பளவு “Sponge City” (நீர் உறிஞ்சும் நகரம்) கட்டமைப்பாக மாற்றப்படும்.
12. MSME: சிறு தொழில்களில் முதலிடம்
தமிழகத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற 5 சிறப்புத் தொழில் குழுமங்கள் அமைக்கப்படும்.
13. நெடுஞ்சாலைத் துறை
AI தொழில்நுட்பம் மூலம் சாலை விபத்துகள் குறைக்கப்படும். சுற்றுலாத் தலங்களுக்கான சாலைகள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
14. கைத்தறி மற்றும் ஜவுளித் துறை
புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நெசவாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படும். தமிழகத்தின் கைத்தறி பொருட்கள் சர்வதேச சந்தையில் கொண்டு சேர்க்கப்படும்.
“இது திராவிட மாடல் 2.0”
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், “கடந்த 5 ஆண்டுகால கனவுகள் நனவாகிவிட்டன. அதன் வெற்றியால் கிடைத்த நம்பிக்கையில், அடுத்தகட்டமாக திராவிட மாடல் 2.0 ஆட்சியை முன்னெடுக்கிறோம். இது வெறும் அறிக்கை அல்ல; தமிழக மக்களின் கனவு. 2030-ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்தே தீருவோம்,” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.



