ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுமலைக்கிராமம் பெண்கள்பயன்பெறும்வகையில் மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து வசதியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சியில் வடகாடு, பரப்பலாறு அணை, பால்கடை, கண்ணனூர், பெத்தேல்புரம், புலிக்குத்திகாடு உள்ளிட்ட ஊர்கள் உள்ளன.
இங்குள்ள ஆண்கள், பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தினந்தோறும் ஒட்டன்சத்திரத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த மலைக்கிராமங்கள் வழியாக நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் சென்று வருவதால் பெண்கள் கட்டணம் செலுத்தி சென்று வந்தனர். இதனால் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த விடியல் பயணத்தில் பெண்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணியிடம் மகளிர் விடியல் பயணம் செல்லும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதன் அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகம் நகர்புற பேருந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கிராமங்கள் வழியாக புலிகுத்திகாடு வரை 4 முறை சென்று வரும் வகையில் மகளிர் விடியல் பயணம் புதிய அரசு பேருந்து வசதியை ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவு பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் திமுக ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்வரன், தர்மராஜ், எஸ்.ஆர்.கே.பாலு, தங்கச்சியம்மாபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.முருகானந்தம் மற்றும் திமுக நிர்வாகிகள், அரசு துறை அலுவலர்கள், மலைக்கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். வசதியை புதிய அரசு பே ருந்து ஏற்படுத்திய அமைச்சர் அர.சக்கரபாணிக்கு மலைக்கிராம பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.



