பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையில் மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பட்டாளி மக்கள் கட்சி தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், நிறுவனர் ராமதாசை தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றம்த்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், உள்கட்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை பா.ம.க.வின் “மாம்பழம்” சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வழக்குகளும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்கனவே உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். மேலும், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சியான பா.ம.க.வின் உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும், “மாம்பழம்” சின்னத்தை முடக்கம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
விசாரணையின் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர், “தந்தை சொல்வதை மகன் கேட்பது இல்லை” என்று பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்வது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரித்தனர்.
இறுதியாக, உள்கட்சி பிரச்சினை தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனக் கூறி, இந்த இரண்டு மனுக்களும் விசாரணைக்கு உகந்ததல்ல என தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



