2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்வி குறித்துப் பேசிய பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன், தோல்விக்குத் தனது அணி வீரர்கள் சொதப்பியது மட்டும் காரணமல்ல என்றும், இஷான் கிஷனின் அதிரடி ஆட்டமே முக்கியக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 175 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மைக் ஹெசன், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இஷான் கிஷன் ஆடிய விதம் தான் எங்களிடமிருந்து வெற்றியையைப் பறித்துச் சென்றது. ஆடுகளம் ஆரம்பத்தில் சுழற்பந்து வீச்சுக்கு நன்றாக ஒத்துழைத்தது. ஆனால் இஷான் கிஷன் எந்தப் பயமும் இன்றி விளையாடினார்.” என்றார்.
மேலும் பேசிய மைக் ஹெசன், இந்த ஆடுகளத்தின் தன்மையை வைத்துப் பார்க்கும்போது, இந்தியா எடுத்த ஸ்கோர் மிகவும் அதிகம் என்று குறிப்பிட்டார். “இஷான் கிஷனின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரை விட இந்தியா 25 ரன்கள் வரை கூடுதலாக எடுத்துவிட்டது. எங்கள் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் தங்கள் இயல்பான பந்துவீச்சை மறந்து தவறு செய்துவிட்டனர்,” என்று வேதனை தெரிவித்தார்.
பாகிஸ்தான் பேட்டிங் குறித்துப் பேசிய ஹெசன், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ளத் தவறியதை ஒப்புக்கொண்டார். “நாங்கள் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்ளத் தவறிவிட்டோம். இந்திய பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் சிறப்பாகச் செயல்பட்டனர்” என்றார்.
இதற்கிடையில், இஷான் கிஷனின் ஆட்டம் குறித்துப் பேசிய இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் படேல், “பந்து நன்றாகத் திரும்பியபோது இஷான் ஆடிய விதம் மிகச்சிறப்பு. சர்வதேசப் போட்டிகளில் அவரது சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று” என்று புகழ்ந்துள்ளார்.



