“தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “நடைபெற்று முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியமைப்பைச் சுற்றி அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிவு அரசியல் வட்டாரங்களில் முக்கிய ‘சிக்னல்’ ஆக பார்க்கப்படுகிறது.
முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், கூட்டணி ஆதரவை பெற தவெக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது.
இதன் ஒரு பகுதியாக, திமுக கூட்டணியில் இருந்த 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியானது. மேலும், விஜய் போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்தது.
இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழக ஆளுநரை, விஜய் சந்தித்து ஆதரவு கடிதங்களை வழங்கினார். எனினும், “118 எம்எல்ஏக்களின் முழுமையான ஆதரவு பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெரும்பான்மையை எட்டுவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியது. தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்தன. இதன்மூலம் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியானபோதிலும், அக்கட்சி அதனை மறுத்துள்ளது. மேலும், தொல். திருமாவளவன் தலைமையிலான விசிக தரப்புடனும் தவெகவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர். விசிக ஆதரவு குறித்து திருமாவளவன் இன்று மாலை தனது முடிவை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை ஆளுநரை மூன்றாவது முறையாக சந்தித்த விஜய், பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு சென்று, இடதுசாரி தலைவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் பரவிய நிலையில், புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.



