“தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள் மற்றும் 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்தச் சூழலில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதல்வர் என்ன செய்யப்போகிறார் என்பதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும்” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்
தமிழகத்தில் கடந்த 15 நாட்களில் மட்டும் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை ஊடகங்களில் வந்த சம்பவங்கள் மட்டுமே. ‘மாற்றம், மாற்றம்’ என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களின் நிர்வாகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக மாறியிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சியாகும்.
கோவை சூலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள், விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். சூலூர் சிறுமியின் தாயாருக்குக் கூடத் தெரிவிக்காமல், அவசர அவசரமாகச் சிறுமியின் உடல் எரிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தொடரும் வன்முறைகள்
மேலும், கோவையில் இளம்பெண் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. முதல்வரின் சொந்தத் தொகுதியான பெரம்பூரில், போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
“முதல்வரே, இது தமிழ்நாடா அல்லது உத்தரப் பிரதேசமா?” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்துடைப்புக் கூட்டம்
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களைப் பேசிய முதல்வர், தற்போது குற்றங்கள் அதிகரிக்கும் போது வாய் திறக்க மறுப்பது ஏன்? எங்கே போனது உங்களது ‘சிங்கப்பெண் அதிரடிப் படை’?
குற்றச்சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வரும் சூழலில், இன்று காலை கண்துடைப்பிற்காகக் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசின் கடமை
நிலைமையின் தீவிரத்தை அரசு முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுக்க, முதல்வர் ஆக்கப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாகப் பதில் சொல்லி ஆக வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



