நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், எனவே மழைக்காலக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்க வேண்டாம் என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்குவதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகள் அவையில் ஆக்கபூர்வமான முறையில் பங்கேற்க வேண்டும் என்றார்.
“விவாதம் நடத்த வேண்டும் என்று விரும்பினால், அவையில் நேர்மறையான பங்கை செலுத்த வேண்டும். ஆனால் நாடாளுமன்ற விவாதத்தைத் தவிர்க்க விரும்பினால், அடுத்தடுத்து நிபந்தனைகளை விதிக்கத் தொடங்குவீர்கள். விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் முன்வைக்கலாம். ஆனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்படக்கூடாது” என்று அவர் கூறினார்.
மேலும், “எதிர்க்கட்சிகளை மனதார கேட்டுக்கொள்கிறோம். நாடாளுமன்றத்தை முடக்காதீர்கள். இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கியமான மசோதாக்களும், பல்வேறு முக்கிய பணிகளும் உள்ளன. அவற்றை ஒத்திவைத்துவிட்டு, முதலில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் நாட்டில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதத்தைத் தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதால், இது ஒரு மாநிலம் அல்லது ஒரு அரசியல் கட்சியுடன் தொடர்புடைய பிரச்சினை மட்டுமல்ல, நாடு முழுவதும் கவலை அளிக்கும் விவகாரம் என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.



