திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் விரலை எலிகள் கடித்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீட்டு கொண்டாட்டத்தில் அரசு கவனம் செலுத்துவதாகக் கூறி, தமிழக அரசை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் தற்போதைய நிலைக்கு இந்தச் சம்பவமே சாட்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அரசை நம்பி சிகிச்சை பெற வந்த பெண் கால் விரலை இழந்த நிலையில், அவருக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது? மக்கள் பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் சூழலில், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்து கொண்டாடி செல்ஃபி வெளியிடுகிறார். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை படம் பார்க்க ‘லீவு’ போட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நாடும், நாட்டு மக்களும் எக்கேடாய் போனால் என்ன என்ற மனநிலையுடன் ‘பிளாஸ்ட் பிளாஸ்ட்’ கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய நீரோ (Nero) அரசுக்கு எனது கடும் கண்டனம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையும், இழப்பீடும் வழங்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் தளப் பதிவில், “எங்களுக்கு ‘ஜனநாயகன்’ வேண்டாம்; ஜனநாயகம் வேண்டும். போராடும் மக்களை அவதூறாக பேசி கைது செய்வதுதான் ஜனநாயகமா? மக்கள் போராடும் நிலையில், மக்களோடு நிற்க வேண்டிய ஜனநாயகன் எங்கே?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த கருத்துகள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவுகளில் இடம்பெற்றவை.



