தற்போதைய பதற்றமான சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வருவதை சிறிது காலம் ஒத்திவைக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்வரின் அலுவலகம் சார்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து நேரில் சந்தித்து ஆலோசிக்க விருப்பம் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனை ஏற்று ஆகஸ்ட் 3-ஆம் தேதி சந்திப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் அண்மைய உத்தரவுகளுக்குப் பிறகு நிலவும் சூழல் அந்தச் சந்திப்புக்கு உகந்ததாக இல்லை என்று கருதுவதாகவும், இரு மாநிலங்களுக்கும் இடையே சுமுகமான சூழல் நிலவ வேண்டிய அவசியம் இருப்பதால் சந்திப்பை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.
“தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் கர்நாடகா வருவது சரியாக இருக்காது. அவர் வரும்போது போராட்டங்கள் நடைபெற்றால் அது இரு மாநிலங்களுக்கும் நல்லதல்ல. இரு மாநிலங்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதியான சூழலில் சந்திப்பு நடைபெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார்.
மேலும், காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த கர்நாடக அரசு கடமைப்பட்டுள்ளதாகவும், எந்த உத்தரவையும் மீற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.
மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பாக பேசிய அவர், மின் உற்பத்தியைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் அந்தத் திட்டம் தமிழகத்திற்கே அதிக பலன் அளிக்கும் என்று கூறினார்.
இதுகுறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், மாநில நலன் தொடர்பான விவகாரங்களில் அனைவரின் ஒத்துழைப்பையும் கர்நாடக அரசு நாடுவதாகவும் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
இதற்கிடையே, மேகேதாட்டு அணை தொடர்பான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



