தமிழகத்தில் இருந்து கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கனிமங்களை வெளிமாநிலங்களுக்கு மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உட்கட்டமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பணிகளுக்குத் தேவையான கருங்கல், ஜல்லிக்கற்கள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதற்கும், செயற்கை விலையேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கும், தமிழ்நாடு சட்டவிரோத கனிமச் சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ஆம் தேதி தமிழக அரசு திருத்தம் செய்தது.
அதன்படி, காரைக்கால் மற்றும் புதுச்சேரியைத் தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்களை மூன்று மாதங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யவும், திருத்தப்பட்ட விதிகளை செல்லாது என அறிவிக்கவும் மது பிரேமநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், “திருத்தப்பட்ட விதிகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். சட்டப்படி உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் எங்களுக்குச் சொந்தமானவை. அவற்றை எங்கு விற்பனை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் எங்களுக்கு உள்ளது. எனவே, மூன்று மாத தடைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.



