அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், “மொழி என்பது தொடர்புக்கான கருவி மட்டுமல்ல. தமிழ் என்பது நமது உயிரும், உணர்வும், பண்பாடும் ஆகும். தாயைப் போற்றுவது போல தாய்மொழியையும் போற்றுவது நமது கடமை. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழியையோ, மதத்தையோ, இனத்தையோ தாழ்த்திப் பேசுவதில்லை. மாறாக, உலகம் முழுவதும் தமிழின் பெருமையை உயர்த்திப் பேசுகிறது” என்றார்.
மேலும், மனோன்மணியம் சுந்தரனார் 1891-ஆம் ஆண்டு இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழின் தொன்மை, தமிழர் பண்பாடு மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மையை உயர்த்திப் பேசும் உயரிய படைப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1970-ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசாணை நடைமுறையில் உள்ளதாகவும், 2021 டிசம்பர் 17-ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் முதலமைச்சர் நினைவூட்டினார்.
மேலும், 2026 ஜனவரி 28-ஆம் தேதி மத்திய அரசு அரசு விழாக்களுக்கான நடைமுறைகள் தொடர்பாக வெளியிட்ட வழிகாட்டுதலில் மாநிலப் பாடல் குறித்து எந்தவித குறிப்பும் இடம்பெறாததால், கடந்த ஜூலை 9-ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதி தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்குவது அரசியலமைப்புக்கும், இந்திய ஒற்றுமைக்கும் எதிரானது அல்ல என்றும், “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற இந்தியாவின் உயரிய கொள்கையை வலுப்படுத்தும் செயலாகும் என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, அனைத்து அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் சட்டப்பேரவையில் முன்வைத்து, அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தத் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.



