கும்பகோணம் காந்தியடிகள் சாலையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்- ஓரணியில் தமிழ்நாடு” தீர்மான ஏற்பு விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும், மாநகர செயலாளர் தமிழழகன் வரவேற்பிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டை தலை குனிய வைப்பதற்கு அதிமுக செய்யும் நடவடிக்கை எல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. சமீபத்தில் அதிமுக 5 கட்சிகளாகவே போய்விட்டது. இதனை அதிமுக என்று சொல்லவே கூடாது என டிடிவி தினகரனே சொல்கிறார்.
இது அதிமுக அல்ல எடப்பாடி பழனிச்சாமி திமுக என அவர் சொல்கிறார். டெல்லிக்கு சென்ற பழனிச்சாமி முக்காடு போட்டுக்கொண்டு வந்தார். இதற்கு தமிழ்நாட்டையே முக்காடு போட வைத்து விடுவேன் என்று நமக்கு அறிவிக்கிறார்.
இவர்களுக்கு தமிழ்நாட்டை ஓரணியில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்களது கட்சியையே ஒன்றாக நடத்த முடியவில்லை.பாஜகவின் காலில் விழுந்து விட்டார், எடப்பாடி பழனிச்சாமி. அடிமையாக இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலாவின் காலையே இன்று வாரிவிட்ட பழனிச்சாமிக்கு ஒரு நன்றி உணர்வு இருக்கிறதா?
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 18 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேர்கின்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் வழங்குபவர் தான் நம் முதலமைச்சர். அதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு, மாவட்ட அவைத்தலைவர் நசீர்முகமது, ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகனள் பங்கேற்றனர்.



