விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான க.பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
பின்னர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். முகாமில் பொதுமக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:-
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகையூர் ஒன்றியத்தில் மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட நிகழ்ச்சியில் இதுவரை 4300 பேர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்,அவர்களில் முதல் கட்டமாக 1750 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களின் மனுக்களும் அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தகுதி உள்ள பயனாளிகளுக்கு மீண்டும் வழங்க தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். முகாமில் அரசு அலுவலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



