வங்கதேசத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு, வங்கதேச தேசியவாத கட்சி (BNP) வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதின் அதிரடியான பல புகார்களை முன்வைத்துள்ளார். முன்னாள் இடைக்கால அரசு ஆலோசகர் முகமது யூனுஸ், நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை என்றும், தமக்கு எதிராகச் சதி செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வங்காள நாளிதழான ‘காலர் காந்தோ’-வுக்கு அதிபர் மாளிகையில் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அரசியலமைப்பு மீறல்கள்
முகமது யூனுஸ் தலைமையிலான ஒன்றரை ஆண்டு கால ஆட்சியில், நாட்டின் சட்ட விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையான வெளிநாட்டுப் பயணங்கள்: “முகமது யூனுஸ் 14 முதல் 15 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். விதிமுறைப்படி அவர் செல்லும்போதும், திரும்பிய பின்பும் எனக்குத் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ஒருமுறைகூட அவர் என்னைச் சந்திக்கவோ, எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவோ இல்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரச் சட்டங்கள்: யூனுஸ் நிர்வாகம் கொண்டு வந்த 133 அவசரச் சட்டங்கள் தேவையற்றவை என்றும், அரசியலமைப்பு வெற்றிடத்தை உருவாக்கப் பல முயற்சிகள் நடந்ததாகவும் அவர் சாடியுள்ளார்.
“அரண்மனைக் கைதியாக இருந்தேன்”
அதிபர் மாளிகையிலேயே தான் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக ஷஹாபுதின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் ஓர் அரண்மனைக் கைதியாக மாற்றப்பட்டேன். கத்தார் மற்றும் கொசோவா நாடுகளுக்கு நான் மேற்கொள்ள இருந்த பயணங்களை யூனுஸ் நிர்வாகம் திட்டமிட்டுத் தடுத்தது. என்னை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவரை அமர்த்தவும் சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஒரு நீதிபதியின் தலையீட்டால்தான் அது தடுக்கப்பட்டது.”
ராணுவத்தின் தலையீடு
2024, அக்டோபர் 22 அன்று அதிபர் மாளிகையைச் சூறையாட கும்பல்கள் திரட்டப்பட்ட போது, ராணுவம் எடுத்த நடவடிக்கையே தன்னைக் காப்பாற்றியதாக அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
“நாட்டின் அமைதியைச் சீர்குலைக்க நடந்த முயற்சிகளின் போது, ராணுவமும் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைமையும் அரசியலமைப்பைப் பாதுகாக்க எனக்கு உறுதுணையாக நின்றனர். ‘நீங்கள் ஆயுதப்படைகளின் உச்ச தளபதி. உங்கள் தோல்வி என்பது படைகளின் தோல்வி’ என ராணுவத் தலைவர்கள் எனக்குத் தைரியம் அளித்தனர்,” என்று ஷஹாபுதின் அந்தப் பேட்டியில் விவரித்துள்ளார்.
இந்த விவகாரம் தற்போது வங்கதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



