இந்து, சீக்கிய மற்றும் பவுத்த மதங்களைத் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் பட்டியல் சமூகத்தினருக்கான (SC) அடையாளத்தை இழக்கிறார்கள் என்றும், அதன் அடிப்படையில் அவர்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.கே. மிஷ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிந்தடா ஆனந்த் என்பவர் ஒரு கிருஸ்தவப் பாதிரியார். இவர் தனது கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரார்த்தனை கூட்டங்களை நடத்தி வந்துள்ளார். அப்போது, அக்கலா ராமி ரெட்டி உள்ளிட்ட சிலர் தன்னைத் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, அவர்கள் மீது எஸ்சி – எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், “புகார்தாரர் கிருஸ்தவ மதத்திற்கு மாறியதன் மூலம் தனது பட்டியல் சமூக அடையாளத்தை இழந்துவிட்டார். எனவே, இச்சட்டத்தின் கீழ் அவர் பாதுகாப்பு கோர முடியாது” எனத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சிந்தடா ஆனந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
உச்ச நீதிமன்றத்தின் முக்கிய கவனிப்புகள்:
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் வாதங்களை நிராகரித்து பின்வரும் காரணங்களைக் குறிப்பிட்டனர்:
மத அடையாளம்: மனுதாரர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கிருஸ்தவ மதத்தைப் பின்பற்றி போதகராகச் செயல்பட்டு வருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மறுமதம் மாற்றம் இல்லை: அவர் மீண்டும் தனது பழைய மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ (மடிகா சமூகம்) திரும்பியதாக எவ்வித ஆதாரமும் இல்லை.
சட்ட ரீதியான வரையறை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்து, சீக்கிய மற்றும் பவுத்த மதங்களைத் தவிர பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் பட்டியல் சாதியினராகக் கருதப்பட மாட்டார்கள்.
“வேறு மதத்திற்கு மாறுவது ஒருவரின் பட்டியல் சமூக அடையாளத்தை இழக்க வழிவகுக்கும். அந்த அடையாளத்தை இழந்த ஒருவர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சலுகைகளையோ அல்லது பாதுகாப்பையோ கோர தகுதியற்றவர் ஆகிறார்,” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.



