அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் காணாமல் போயிருந்த விமானி, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார்.
ஈரான் வான் பரப்பில் பறந்த அமெரிக்க விமானப்படையின் எப்-35 மற்றும் எப்-15 வகை போர் விமானங்கள் அண்மையில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரு விமானி பாதுகாப்பாக திரும்பிய நிலையில், மற்றொரு விமானி காணாமல் போனார்.
இந்த சூழலில், காணாமல் போன விமானியை கண்டுபிடிக்க அமெரிக்காவும் ஈரானும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவரை உயிருடன் பிடிப்பவர்களுக்கு 60,000 டாலர் வெகுமதி வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.
இதையடுத்து, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் விமானி மீட்கப்பட்டு, தற்போது பாதுகாப்பாக ஈரானை விட்டு வெளியேறியுள்ளார் என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், “அமெரிக்க ராணுவம் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டு, வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மீட்கப்பட்டவர் மிகவும் மதிப்புக்குரிய கர்னல் ஆவார்” என கூறினார்.
மேலும், அந்த விமானி ஈரானின் அபாயகரமான மலைப்பகுதிகளில் பதுங்கி இருந்ததாகவும், அவரை மீட்க பல சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் கூடிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கையின் போது கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும், அதற்குப் பிறகு விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறினார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் வான் ஆதிக்கத்தை வெளிப்படுத்துகிறது என்றும், இதில் எந்த அமெரிக்க வீரரும் உயிரிழக்கவோ காயமடையவோ இல்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த மீட்பு நடவடிக்கை குறித்து ஈரான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.



