மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் பதற்ற நிலைமையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்ச திட்டம் மத்தியஸ்தர்கள் மூலம் ஈரானுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்த திட்டத்தைத் தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விடுத்த அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, இரு தரப்பும் கடுமையான எதிர்தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. 25 நாட்களை கடந்த இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை முன்னேற்றமாக உள்ளதாகக் கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 23ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்திருந்தார். எனினும், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என ஈரான் தெளிவுபடுத்தியது.
இதற்கிடையில், திட்டமிட்ட இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அதேசமயம், இஸ்ரேலுக்கும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்களுக்கும் எதிராக ஈரான் தனது தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தானின் உதவியுடன் மத்தியஸ்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் ஈரானிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த முயற்சிகளை ஈரான் ராணுவம் கடுமையாக விமர்சித்துள்ளது. “எந்த சூழ்நிலையிலும் எங்கள் நிலைப்பாடு மாறாது; சமரசம் எங்களுக்கான வழி அல்ல” என ஈரான் ராணுவத் தலைமையகப் பேச்சாளர் லெப்டினன்ட் கர்னல் இப்ராஹிம் சோல்பகாரி அரசு தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போர் நிறுத்தத் திட்டம் குறித்து அமெரிக்கா முன்வந்தது இஸ்ரேலுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை.
இதேவேளை, ஈரானின் அரசு கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் புதிய மற்றும் தீவிரமான தாக்குதல்களை தொடங்கியுள்ளது. பதிலுக்கு, ஈரானும் இஸ்ரேல் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. குவைத் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதலும் இதில் அடங்கும்.
இந்த சூழலில், ஒரு பக்கம் போர் நிறுத்த முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமெரிக்கா, மறுபக்கம் தனது படை வலிமையை மேற்கு ஆசியாவில் அதிகரித்து வருகிறது. கடற்படைக்கு ஆதரவாக பாராட்ரூப்பர்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு கடற்படை பிரிவுகளை அனுப்ப பென்டகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வீரர்கள் அந்தப் பகுதியில் திரள உள்ளனர்.



