காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், நீர் நிலைகளை தூர்வாருதல், கரைகளை, பலப்படுத்துதல் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மூலம் எவ்வளவு மழை வந்தாலும் தாங்கக்கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார்.
கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் த.வெ.கவை க கண்டித்துள்ளது குறித்து கேட்டதற்கு, “நீதிபதிகள் சொல்வது தான் மெயின், என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள்” என்றார்.
210 தொகுதிகளில் வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி வெற்றி பெறுவோம் என பேசியது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொருவரும் அப்படித்தான் சொல்வார்கள். ஏன் சீமான் கூட சொல்லுவார். தேர்தலில் தான் தெரியும் என்றார், துரைமுருகன்.
விஷ சாராய சாவுகள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சிக்கு ஏன் முதல்வர் போகவில்லை என்ற கேள்விக்கு, “எதிர்க்கட்சிகள் அப்படித் தான் சொல்வார்கள். அன்றைய சூழல் வேறு, இன்றைய சூழல் வேறு. 41 பேர் உயிரிழந்தது மிக சாதாரணமானது அல்ல” என்று துரைமுருகன் பதில் அளித்தார்.
விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, “விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது பண்ணுவோம். தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம்” என்று அவர் கூறினார்.



