தேர்தல் பணிக்கான பொறுப்புகள் அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக வழங்கப்படும் சூழலில், கேரளாவில் ஒரு இளம் ஆசிரியை தனது தேனிலவு பயணத்திற்காக தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்த சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள குழிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அந்த ஆசிரியை, வரும் மார்ச் 29ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் லடாக்கிற்கு தேனிலவு பயணம் மேற்கொள்ள அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். இதற்காக சுமார் ரூ.1.15 லட்சம் செலவில் விமான டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் வசதிகளை பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் காலம் நெருங்கியதால் அரசு ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் நிலையில், தன்னுக்கும் தேர்தல் பணி வழங்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த ஆசிரியை, தன்னுடைய சூழ்நிலையை விளக்கி மனு அளித்தார்.
அந்த மனுவுடன் திருமண அழைப்பிதழ், பயணத் திட்ட விவரங்கள், முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் மற்றும் ஹோட்டல் ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களையும் இணைத்திருந்தார். “சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் இந்த தேனிலவு பயணத்தை திட்டமிட்டுள்ளோம்; தயவுசெய்து இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாக தேர்தல் பணியிலிருந்து விலக்கு பெறுவது கடினமான ஒன்றாக இருந்தாலும், ஆசிரியையின் உண்மையான கோரிக்கையை கவனித்த ஆட்சியர், அதனை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.
தேர்தல் நேரங்களில் விடுப்பு பெற பலர் பல்வேறு காரணங்களை முன்வைக்கும் சூழலில், தனது வாழ்க்கையின் முக்கிய தருணத்திற்காக நேர்மையாக கோரிக்கை வைத்த இந்த ஆசிரியை, சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறார்.



