NCERT கவுன்சில் கூட்டத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது இந்துத்துவா கொள்கையாக இருப்பதாகவும், மும்மொழிக் கொள்கை மூலம் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிப்பதற்கு மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், பிஎம் ஸ்ரீ திட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது. இதனிடையே, NCERT புத்தகங்களில் இந்தி பெயர்கள் திணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு கேரளா அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனிடையே கல்வி நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து தமிழ்நாடு அரசுடன் ஆலோசிக்க இருப்பதாகவும் கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மறுத்ததால் கேரளாவுக்கு ஒதுக்க வேண்டிய ரூ.1500 கோடி ரூபாய் கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி டெல்லியில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவன் குட்டி, பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாகவும், இத்திட்டத்தில் சேர்ந்தால், அன்று மாலையே நிதியை விடுவிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆனால், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர கேரளா தயாராக இல்லை எனவும், மத்திய அரசின் செயல்பாடுகள் கூட்டாட்சி மற்றும் ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
மேலும், கல்வி நிதியை வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.