போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவிப்பு வெளியிட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுள்ளநிலையில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல்காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக உச்ச கட்ட போர்பதற்றம் நிலவியது. கடந்த 4 நாட்களாக இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் சமாதான முயற்சியால் இந்தியா – பாகிஸ்தான் இடையே நேற்றுமுன்தினம் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இரு நாடுகளின் முப்படைகளும் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் தாக்குதலை நிறுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவித்தார். டிரம்ப் அறிவித்த பிறகே மத்திய அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை டிரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமனதான கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த கூட்டம் எதிர்வரும் சவால்களை எதிர்கொள்ளவும், நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்கவும் ஒரு வாய்ப்பாக அமையும்.
பகல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதன்முதலில் அறிவித்த போர்நிறுத்தம் ஆகியவை குறித்து மக்களும்,அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.