தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை நயன்தாரா குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய கருத்துக்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆர்ப்பாட்டத்தின் பின்னணி
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம் சாட்டி அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் இன்று நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சர்ச்சை பேச்சு: என்ன நடந்தது?
மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினின் “உங்கள் கனவைச் சொல்லுங்கள்” என்ற திட்டத்தைக் கடுமையாகச் விமர்சித்த சி.வி. சண்முகம் பேசியதாவது:
”அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்று சொன்னார். ஆனால் ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று உங்கள் கனவைச் சொல்லுங்கள், அதை நிறைவேற்றுகிறேன் என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும் என்று நான் கேட்டால், அவர் நிறைவேற்றி வைப்பாரா? நயன்தாராவைத் திருமணம் செய்து வையுங்கள் என்று யாராவது கேட்டால் இவரால் செய்ய முடியுமா?”
பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறி நடத்தப்பட்ட போராட்டத்திலேயே, ஒரு முன்னணி நடிகையை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், “ஆட்சி முடியும் நேரத்தில் வந்து கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.
குவியும் கண்டனங்கள்
பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேச வந்த இடத்தில், ஒரு பெண்ணை போகப்பொருளாகச் சித்தரித்துப் பேசிய சி.வி. சண்முகத்திற்குப் பெண்ணிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரன் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது சி.வி. சண்முகத்தின் இந்தப் பேச்சு திரைத்துறையினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நேரத்தில் இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுகள் அதிமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



