திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் பெற வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக–மார்க்சிஸ்ட் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை வழங்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.
மேலும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெற்றுள்ளதால் பேச்சுவார்த்தையை உடனடியாக நிறைவு செய்ய சிரமங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கூடுதல் தொகுதிகள் கோரிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசித்து இன்று இரவு பதில் அளிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளதால், தொகுதி பங்கீட்டை முடிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தொகுதிகளை குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதனை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் தரப்பு தெரிவித்துள்ளதாகவும் சண்முகம் கூறினார்.
“ஒவ்வொரு கட்சியும் அதன் அரசியல் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுகிறது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் பெற்றது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய பலத்திற்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.



