கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிற்பக்கூடத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர பிரமாண்ட பஞ்சலோக ஆதிபராசக்தி சிலை சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் பனமரத்துபட்டி கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோயிலில் பஞ்சலோக சிலை நிறுவ தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சிலை தயாரிப்பு பணியை கொரநாட்டு கருப்பூர் சிற்பக்கூடத்துக்கு கோயில் நிர்வாகம் ஒப்படைத்தது. ஸ்தபதி கோபு தலைமையில் 25 முதல் 50-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்கள் இணைந்து பணியில் ஈடுபட்டனர்.
சிலையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனியாக மெழுகால் வார்க்கப்பட்டு அச்சு எடுக்கப்பட்டது. இவ்வாறு 38 அடி உயர மெழுகு வடிவம் முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், நாகம் ஆகிய ஐந்து உலோகங்கள் உருக்கப்பட்டு ஒரே வார்ப்பில் ஊற்றி பஞ்சலோக சிலை வடிவமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிற்பக் கலைஞர்கள் இணைந்து சிலையை பாலிஷ் செய்து அழகுபடுத்தினர். சிலையை நிறுவ 13 அடி உயர பீடமும் தயாரிக்கப்பட்டது. பீடத்துடன் சேர்த்து சிலையின் மொத்த உயரம் 51 அடியும், எடை சுமார் 65 டன்னும் ஆகும்.
முழு சிலையை உருவாக்க சுமார் ஐந்து ஆண்டுகள் எடுத்ததாக சிற்பக்கூட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கி சிலை எடுத்துச் செல்லப்பட்டது. இதற்காக கும்பகோணம் மற்றும் சேலத்திலிருந்து ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் லாரியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
புறப்படுவதற்கு முன்பு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிரமாண்ட சிலையை காண அப்பகுதி மக்கள் திரண்டனர். மலர்கள் தூவி வணங்கிய அவர்கள், சிலையின் கலைநயத்தைக் கண்டு மெய்சிலிர்த்தனர்.
இந்த சிலை ஓரிரு நாட்களில் பனமரத்துபட்டி கோயிலை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



