சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5,300 கோடி முதலீட்டில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைக்க MRF நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மார்ச் 4, 2026) தலைமைச் செயலகத்தில் கையெழுத்திடப்பட்டது.
தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்டம் சிப்காட் – இலுப்பைக்குடி தொழிற்பூங்காவில் அதிநவீன டயர் உற்பத்தி ஆலையை நிறுவ MRF நிறுவனம் ரூ.5,300 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டயர்கள், டியூப்கள் மற்றும் பாதுகாப்புப் பட்டைகள் (Flaps) தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள MRF, இந்தியா முழுவதும் 10 இடங்களில் உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. அதில் திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தமிழ்நாட்டில் இயங்கும் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை. தற்போது தனது தொழில்துறையை விரிவுபடுத்தும் நோக்கில் அடுத்த 12 ஆண்டுகளில் இந்த புதிய ஆலையை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு கப்பல் கட்டுமானக் கொள்கை 2026-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாட்டை உலகளவில் முன்னணி கப்பல் கட்டுமான மையமாக உருவாக்கும் நோக்கில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கப்பல் கட்டுமானம், வடிவமைப்பு, பழுதுபார்த்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு போன்ற துறைகளை ஒருங்கிணைக்கும் முழுமையான கடல்சார் தொழில் சூழலை உருவாக்குவது இக்கொள்கையின் முக்கிய இலக்காகும்.
மேலும், கப்பல் கட்டுமானத் தளங்கள் (Shipyards), பசுமை கப்பல் மறுசுழற்சி (Green Ship Recycling), கடல்சார் உதிரிபாக உற்பத்தி (Marine Component Manufacturing) போன்ற துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், மூலதன மானியம், உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகைகள் (PLI), சொத்து குத்தகை உள்ளிட்ட பல்வேறு ஊக்கங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழ்வதுடன், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக வளர்ந்து வருகிறது. பரவலான வளர்ச்சி மற்றும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளில் மாநில அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



