சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கட்சியில் இணைந்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் பதவி வகித்திருந்த ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மயுத்தம் தோல்வி – திமுகவில் புதிய அரசியல் பாதை
அதிமுகவை மீட்பேன் என்ற ‘தர்மயுத்தம்’ முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார். 76 ஆண்டுகால திமுக வரலாற்றில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இவ்வாறு இணைவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
முன்னதாக அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள் திமுகவில் இணைந்த சம்பவங்கள் இருந்தாலும், முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இணைந்தது அரசியல் ரீதியாக குறிப்பிடத்தக்க மாற்றமாக பார்க்கப்படுகிறது.
எம்எல்ஏ பதவியில் தொடரும் ஓபிஎஸ்
திமுகவில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தனது எம்எல்ஏ பதவியை இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல், எம்எல்ஏ ஐயப்பனும் ராஜினாமா செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
“அனைவரையும் அரவணைக்கும் ஆட்சி” – ஸ்டாலினுக்கு பாராட்டு
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “அண்ணா தொடங்கிய தாய்க் கழகமான திமுகவில் மனமகிழ்ச்சியுடன் இணைந்துள்ளேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து செல்லும் வகையில் கட்சியையும் ஆட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், “சர்வாதிகாரமாக ஆணவப் போக்குடன் செயல்படும் எடப்பாடி பழனிசாமி எந்த காலத்திலும் இனி வெற்றி பெற முடியாது. அவரது தலைமையில் அதிமுக அழிவுப் பாதையில் செல்கிறது” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
“அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை”
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் லட்சக்கணக்கான தொண்டர்கள் திமுகவில் இணைந்துள்ளதாகவும், அதிமுகவில் அனைவரையும் அரவணைக்கும் போக்கு இல்லை என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.
“எந்த அழுத்தமும் இல்லாமல், சுயமாக முடிவு எடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு அளித்தால் போட்டியிடத் தயாராக உள்ளேன். மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதிமுகவுக்கு இனி எதிர்காலமே இல்லை” என அவர் தெரிவித்தார்.
துணைப் பொதுச் செயலாளர் பதவி?
இதற்கிடையில், ஓபிஎஸுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு பின்னர் முக்கிய பொறுப்பில் செயல்படுவார் எனவும் கட்சிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.



