பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் 7வது நாள் தேர்த் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா இம் மாதம் 24ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். விழாவில் முக்கிய விழாவான தீபத்திருவிழா அடுத்த மாதம் 3ந்தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபமும் மாலை 2668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீத மீது மகா தீபமும் ஏற்றப்படும். 7வது நாள்திருவிழா வான தேர்த் திருவிழா இம்மாதம் 30 தேதி நடைபெறுகிறது.
இந்த தேர் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறும், இதில் அம்மன் தேர் பழுதடைந்ததால் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் 42 அடி உயரத்தில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து புதிய அம்மன் தேர் வெள்ளோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
புதுப்பிக்கப்பட்ட அம்மன் தேரில் பராசக்தி அம்மன் நான்கு மாடவீதிகளை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பல்யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலைருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற முழக்கம் எழுப்பி அம்மனை வணங்கி தேர் இழுத்து வழிபட்டனர்.



