தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு இன்னும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்காத நிலையிலும், திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் 5 உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 உறுப்பினர்களின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்துள்ளது.
ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான 118 உறுப்பினர்களின் எண்ணிக்கையை எட்ட இன்னும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு அவசியமான நிலையில், அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தனது முடிவை இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நீடித்து வருகிறது.
இதற்கிடையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்துவிட்டதாக நேற்று தகவல்கள் வெளியானது. இதன் மூலம் விஜய் ஆட்சி அமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுவிட்டார் என கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே, அந்த தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறுத்தது.
இந்நிலையில், அந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே திரையுலக பிரபலங்கள் பலர் “ஜோசப் விஜய் எனும் நான்” என்ற வாசகத்துடன் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகைகள் குஷ்பு சுந்தர் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இதே வாசகத்துடன் பதிவுகளை வெளியிட்டனர்.
அதேபோல் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது சமூக வலைதள பதிவில், “தலைவன் முதலமைச்சராக பதவியேற்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சிபிராஜ் தனது சமூக வலைதள பதிவில், “இறுதிப் போரில் வெற்றி வாகை சூடிய நமது மதிப்புக்குரிய முதலமைச்சர் தளபதி விஜய் அண்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது வெறும் அரசியல் வெற்றி மட்டுமல்ல; தமிழ்நாட்டிற்கான புதிய நம்பிக்கையை மக்கள் வழங்கிய ஆணை” என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ஆட்சியமைப்பாரா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்களின் இந்த தொடர் வாழ்த்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.



