திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா அலுவலகத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்களும், விவசாயிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஆரணி தாலுகா அலுவலகத்தின் கீழ் ஆரணி, அகராப்பாளையம், கண்ணமங்கலம், முள்ளிப்பட்டு, எஸ்.வி.நகரம் ஆகிய 5 பிர்காக்கள் உள்ளன. இதன் கீழ் உள்ள 52 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், தமிழ் நிலம் திருத்தம், மூத்த குடிமகன் சான்று, விதவை சான்று, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் கணினி பட்டா திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக நாள்தோறும் விண்ணப்பித்து வருகின்றனர்.
அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்
தற்போது அரசு சான்றிதழ்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி இருந்தபோதிலும், அதிகாரிகள் மட்டத்தில் ஏற்படும் தாமதத்தால் இந்த வசதி பயனற்றுப் போவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆன்லைனில் பதிவு செய்யப்படும் பிறப்பு, இறப்பு சான்றுகள் மற்றும் பட்டா பெயர் மாற்றங்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் (VAO), வருவாய் ஆய்வாளர் (RI) மற்றும் மண்டல துணை வட்டாட்சியர்கள் நேரில் விசாரணை நடத்திய பிறகும், சான்றுகளை வழங்காமல் இழுத்தடித்து வருவதாகக் கூறப்படுகிறது. கீழ்நிலை அதிகாரிகள் பரிந்துரை செய்த கோப்புகளையும் வட்டாட்சியர் (தாசில்தார்) ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாகத் தெரிகிறது.
வட்டாட்சியர் மாயம்?
இதுகுறித்து வட்டாட்சியரை நேரில் சந்தித்து முறையிடச் செல்லும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பெரும்பாலான நேரங்களில் அவர் அலுவலகத்தில் இருப்பதில்லை எனத் தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
“அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் கேட்டால், அவர்கள் முறையாகப் பதில் அளிப்பதில்லை. ‘அலுவலக வேலையாக வெளியில் சென்றுள்ளார்’ என்றே சாக்கு போக்கு சொல்கிறார்கள். இதனால் பல மணி நேரம் பசியோடு காத்திருக்கும் முதியவர்களும் பெண்களும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்,” என்று பாதிக்கப்பட்ட பொதுமக்களில் சிலர் தெரிவித்தனர்.
வேறு வழியின்றி, பொதுமக்கள் தங்களின் மனுக்களை அங்குள்ள உதவியாளர்கள் மற்றும் எழுத்தர்களிடம் (கிளார்க்) கொடுத்துவிட்டுச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
லஞ்சப் புகார்
வங்கிக் கடன், விதவை உதவித்தொகை மற்றும் இதர நலத்திட்டங்களைப் பெற முடியாமல் விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் தவித்து வரும் வேளையில், தாலுகா அலுவலகத்தில் லஞ்ச நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அதிரடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேர்மையான முறையில் விண்ணப்பிப்பவர்களின் மனுக்கள் வாரக்கணக்கில் கிடப்பில் போடப்படும் நிலையில், லஞ்சம் கொடுக்கும் நபர்களின் மனுக்கள் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வேலை முடித்துக் கொடுக்கப்படுவதாகப் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
கோரிக்கை
பட்டா மாற்றம், யூடிஆர் (UDR) திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய சான்றிதழ்களுக்காகக் காத்திருக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஆரணி தாலுகா அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கும் மனுக்கள் மீது வட்டாட்சியர் உடனடியாக விசாரணை நடத்தி, தகுதியான சான்றிதழ்களை விரைந்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



