கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
“கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 29.06.2026 வரை நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து ஏனைய நாட்களில், சம்பந்தப்பட்ட வட்டங்களுக்கான வருவாய்த் தீர்வாய அலுவலர்களால் இந்த ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.
240 கோரிக்கை மனுக்கள்: இன்றைய நிகழ்வில், திருக்கோவிலூர் குறுவட்டத்திற்குட்பட்ட கரடி, டி.கீரனூர், கீழையூர், திருக்கோவிலூர் (வடக்கு), திருக்கோவிலூர் (தெற்கு), கீழத்தாழனூர், அரும்பாக்கம், வெண்மார், மேலத்தாழனூர், சிவனார்தாங்கல், கனகனந்தல், தனகனந்தல் உள்ளிட்ட 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.
பட்டா மாற்றம், கணக்கு திருத்தம், வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வாரிசுச் சான்று, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை, பொது விநியோகத் திட்டம் மற்றும் நில ஒப்படை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 240 மனுக்கள் பெறப்பட்டன. இவை அனைத்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.
உடனடித் தீர்வு: பெறப்பட்ட மனுக்களில் 6 நபர்களின் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கான குடும்ப அட்டை பெயர் மாற்ற ஆணைகளை கலெக்டர் வழங்கினார். மேலும், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஜெயந்தி என்பவருக்கு ரூ.3,500 மதிப்பிலான காதொலிக் கருவியையும் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, கிராமக் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த வருவாய்த் தீர்வாய முகாம்களில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஜெ.இ.பத்மஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வின் போது, திருக்கோவிலூர் வட்டாட்சியர் ச.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



