சென்னையில் இன்று (ஆக. 5) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் காலை, மாலை என இருமுறை உயர்ந்து, பவுனுக்கு மொத்தம் ரூ.2,240 அதிகரித்துள்ளது.
காலை வர்த்தகம் தொடங்கியபோது, 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,360-க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,06,880-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து மாலை நேரத்திலும் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. கிராமுக்கு கூடுதலாக ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,480-க்கும், பவுனுக்கு மேலும் ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,07,840-க்கும் விற்பனையாகி வருகிறது.
இதன்மூலம், இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு மொத்தம் ரூ.280 மற்றும் பவுனுக்கு ரூ.2,240 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று காலை உயர்ந்த நிலையில், ஒரு கிராம் ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.5,000 உயர்ந்து ரூ.2,40,000-க்கும் விற்பனையாகி வருகிறது. மாலை நேரத்திலும் அதே விலை நீடித்தது.
விலையேற்றத்துக்கு என்ன காரணம்?
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலை, கச்சா எண்ணெய் விலை மாற்றம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீட்டு தேவை மற்றும் உலக பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும், உலகின் முக்கிய தங்க இறக்குமதி நாடுகளில் ஒன்றான இந்தியாவில், சர்வதேச சந்தை மாற்றங்கள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றமும் உலகளாவிய தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தியதையடுத்து, தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. நேற்று (ஆக. 4) பவுனுக்கு ரூ.400 குறைந்திருந்த தங்கம், இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



