ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாநேற்றுமுன்தினம்யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
விழாவில் நேற்று தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பசும்பொன் தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அ.தி. மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். மேலும், முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தேவர் பெருமகனார் ஜெயந்தி விழாவை அரசு தரப்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்தவர் தெய்வத் திருமகனார் தேவர் ஐயா. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது சுமார் 13 கிலோ தங்கத்தில் தேவர் நினைவிடத்தில் இருக்கும் அவரது சிலைக்கு தங்கக் கவசம் சாத்தினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் தனக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் பிரித்துக்கொடுத்து ஏழைகளை வாழவைத்த கொடை வள்ளலாக திகழ்ந்தவர். அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக சார்பாக அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்திருக்கிறோம்.
அவர் தேசிய தலைவராக விளங்கியவர், மக்களுக்காக பாடுபட்டவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்



