ஆரணியை அடுத்தகாமக்கூர் ஏரிக்கரை விரிசல் ஏற்பட்டு உடையும் அபாயத்தில் உள்ளதால் ஏரிக்கரை அருகில் உள்ள விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் பெரிய ஏரி சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலும் இந்த பெரிய ஏரி தற்போது பெய்து வரும் கனமழையால் நிரம்பி அருகே உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் உபரி நீர் நாயக்கன்பாளயம் ஏரி, கொசப்பாளயம் திருமலைசமுத்திரம் ஏரி, ஆகாரம் ஏரி, திருமணி ஏரி உள்ளிட்ட சுமார் 7க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செல்கிறது.
இந்த நிலையில் காமக்கூர் பெரிய ஏரிக்கரை பலமிழந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக உடையும் தருவாயில் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு அவசர நிதி ஒதுக்கப்பட்டு கரையை பலப்படுத்தினர். ஆனாலும் தற்போது மீண்டும் கரை பலமிழந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏரிக்கு வரும் முழுஅளவு தண்ணீரையும் திறந்து விடுகின்றனர்.
இதனால் ஏரிப்பாசன விவசாயிகள் முழு அளவு தண்ணீரையும் வெளியேற்றிவிட்டால் வரும் காலங்களில் நாங்கள் எப்படி பயிர் வைப்பது என்று கவலை தெரிவித்தனர்.
இந்த ஏரிக்கரை உடைந்தால் அருகே உள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடையும் வாய்ப்பும் உள்ளது.
எனவே இது குறித்து பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஏரிக்கரையை பலப்படுத்தி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.



